Monday, November 2, 2009

கன்னியாகுமரி - வயது 54

நாட்டின் ஒரு பகுதியாக இருந்த தென் திருவிதாங்கூர் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாகி ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) 54-ம் ஆண்டு தொடங்கியது.இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய போராடிய முக்கியமானவர்களுள் ஒருவராக விளங்கிய மார்ஷல் நேசமணி சிலைக்கு தியாகிகள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பல போராட்டங்களின் விளைவாக தென் திருவிதாங்கூரின் தமிழ்ப் பகுதிகள் 1956-ம் ஆண்டு நவ. 1-ம் தேதி தமிழகத்துடன் இணைந்தன. ஆனால், கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தின் ஓர் அங்கம் என்ற அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்ற குறை இங்குள்ள மக்களிடம் எஞ்சியிருக்கிறது.

சங்க இலக்கியம் புகழ்ந்து பாடும் நன்செய் கொழிக்கும் நாஞ்சில் நாட்டை உள்ளடக்கியிருந்த இம் மாவட்டப் பகுதிகள் தமிழகத்துடன் இணைவதற்கு முன்பு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சியில் விவசாயத்துக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும், குடிநீருக்காக முக்கடல் அணையும் இங்கு கட்டப்பட்டன. மன்னர் ஆட்சிக்குப் பிறகு மக்களுக்கு பயனுள்ளதாக அணைகள் கட்டப்படவில்லை.

திருவிதாங்கூர் தமிழர்கள் தமிழகத்துடன் இணைவதற்கு நடத்திய போராட்டம் நெடியது. அப் போராட்டத்தில் வெற்றிபெற்று 1956-ம் ஆண்டு நவ. 1-ம் தேதி தமிழகத்துடன் இப் பகுதி இணைந்த நேரத்தில் தமிழக மக்கள் இம் மாவட்ட மக்களை அன்போடும், பாசத்தோடும் வரவேற்கவில்லை என்ற குறைபாடு வரலாற்றில் வடுக்களாக இன்றும் காட்சியளிக்கின்றன.

Wednesday, September 23, 2009

பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி காலமானார்.


சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி (84), காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.


இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணிக்கு காலமானார்.


மறைந்த எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு "சக்கரவர்த்தி திருமகள்', "வீரபாண்டிய கட்ட பொம்மன்', "ராஜராஜ சோழன்', "கந்தன் கருணை', "குணா' உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.


இவர், "திருடாதே', "கந்தன் கருணை', "சினிமா பைத்தியம்' உள்ளிட்ட ஏராளமான படங்களின் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனின் மனைவி.
கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ சாமிநாதன் மரணம்!

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.தனது ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தார். மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.

Sunday, September 13, 2009

செல்லமே - ராடான் மீடியா ஒர்க்ஸ்!

ராதிகா சரத்குமார், ராதா ரவி, டெல்லி கணேஷ், வாசு விக்ரம், ராஜ் கமல், மோகினி, சுபாஷினி, சோனியா, லதா ராவ் மற்றும் பலர்... நடித்து தீனாவின் இசையில் ஜவகர் இயக்கத்தில் செப். 14,2009 முதல் ஓளிபரப்பாகவிருக்கும் ராடான் மீடியா ஒர்க்ஸின் அடுத்த படைப்பு! - செல்லமே!

இதுவரை அரசியாக சின்னத்திரை மூலம் தமிழ் நெஞ்சங்களின் இல்லத்திற்கு வந்து இதயத்தில் இடம் பிடித்த ராதிகா, இப்போது போலீஸ் தொப்பியைக் கழட்டி வைத்துவிட்டு "செல்லமாக' செல்லம்மாவாகி செல்லமே தொடரின் மூலம் பாசத்தைக் கொட்ட வருகிறார்.சித்தி தொடருக்காக திருச்சி ஸ்ரீரங்கம், சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தவர், இப்போது திருக்கோவில்கள் குடிகொண்டிருக்கும் கும்பகோணம், சுவாமிமலையைச் சுற்றி படமாக்கி வந்திருக்கிறார். அரசி,சித்தி - இரண்டு தொடர்களுமே ராதிகா அவர்களையே மையப்படுத்தி அமைந்திருந்தது.செல்லமே ஒரு குடும்ப்பக் கதை. குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். இவங்க கெட்டவங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என பட்டியல் போடாமல் சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதை கிராமிய மணம் கமிழ சித்தரிக்கும் கதை....

Thursday, July 16, 2009

பிரபல இசை மேதை டி.கே.பட்டம்மாள் காலமானார்

பிரபல இசை மேதை டி.கே.பட்டம்மாள் காலமானார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் . கர்நாடக இசையில் மேதையான இவர் நாடு தழுவிய புகழ் பெற்றவர். ஆயிரக்கணக்கான மேடைகளில் இசை பரப்பிய இவருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் இவர் இன்று காலமானார்.

இவருக்கு வயது 90. பத்மபூஷன், பத்மவிபூஷன், தேசியகுயில், சங்கீதகலாநிதி, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வென்றவர். பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த பட்டம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்த கர்நாடக இசை கலைஞர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். சென்னையில் இறுதி்ச்சடங்கு செய்யப்படுகிறது. இவரது மறைவு இசை உலகுக்கு ஈடு செய்ய முடியாதது.