Tuesday, June 18, 2013

கரிமேடு




"தண்டு பாளையா" எனும் பெயரில் கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம், தமிழில் ஸ்ரீனிவாச ராஜு இயக்கத்தில் "கரிமேடு"  என வெளிவந்திருக்கிறது.

காஞ்சிபுரம் சாலையில் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு கும்பல் கழுத்தறுத்து கொல்கிறது. அக்கும்பலில் ஒரு பெண்ணும் இருக்கிறாள். அவர்கள் மதுரைக்கு தப்பி ஓடி பதுங்குகின்றனர்.அங்கும் இவர்கள் கொலை வெறி வேட்டை தொடர்கிறது.இவர்களை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.

ஒரு போலீஸ் அதிகாரி துணிச்சலாக விசாரணையில் இறங்குகிறார். கொலையாளிகளை அவர் எப்படி பிடிக்கிறார் என்பது மீதி கதை...






கொலை கும்பலில் வேவு பார்க்கும் பெண்ணாக வரும் பூஜாகாந்தி மிரட்டியுள்ளார். ரோட்டோரம் உட்கார்ந்து பீடியை புகைத்தபடி வீடுகளை நோட்டம் விடுவது, வீட்டுக்குள் புகுந்து கொலை, கொள்ளை என கூட்டாளிகளுடன் ஈடுபடுவதை உணர்ச்சியின்றி பீடி குடித்தபடி பார்த்துக் கொண்டு இருப்பது அவருடைய அலட்சியமான நடையும், கலைந்த தலையும், குலைந்த புடவையும், எதற்கும் கவலைப்படாமல் குத்துக்காலிட்டு உட்காரும் பாவமும் ரணகளம்!



 பின்னர் காவல் நிலையத்தில் அடிவாங்குவது....


கொலை கும்பல் தலைவனாக வரும் மகரந்த் பாண்டே குரூரம்.... ஆட்களை கழுத்தை அறுத்து பீறிடும் ரத்தம் பார்த்து கோரமாக சிரிப்பது உதறல்.

ரகுமுகர்ஜி - பிரியங்கா ஜோடியின் திருமணமும் அவர்கள் சோக முடிவும் பதற வைக்கும் கிளை கதை.

அர்ஜூன் ஜன்யாவின் இசை, ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரமாண்டங்களுடன் மதுரை கரிமேடாக தெரியும் படத்தின் வசனக்காட்சிகள்,
திடீர் திடீர் என கன்னட தண்டுபாளையாவாக மாறுவது உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், "கரிமேடு" மிகவும் கரடு முரடு!"

Saturday, June 15, 2013

இரங்கல்: இயக்குனர் மணிவண்ணன்



பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.

கோவை மாவட்டம் சூலூரில் 1954-ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தவர் மணிவண்ணன். திரையுலகின் மீதுள்ள ஆர்வத்தால் இத்துறையில்
அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு
கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கை சக்கரம், மூன்றாவது கண்,
தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை உள்ளிட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சமீபத்தில் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., என்ற  படத்தை இயக்கினார்.

கோவை மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும். நடிகர் சத்யராஜுடம் மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார். இருவரும் இணைந்த அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில்  மாபெரும் வெற்றிபடமாக அமைந்தது.


இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் அவர்கள் இன்று (15-06-2013) திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.